அநியாயங்கள் அடக்குமுறைகள் எனும் மேகங்கள் சூழ்ந்திருந்த அந்த நேரத்தில் முஸ்லிம்களின் வழிக்கு ஒளிகாட்ட மற்றொரு மின்னல். ஆம்! இம்மின்னல் முந்திய மின்னலை (ஹம்ஜா (ரழி) முஸ்லிமானதை) விட பன்மடங்காக ஒளி வீசியது. அதுதான் உமர் இப்னு கத்தாப் இஸ்லாமை ஏற்றுக்கொண்டது. நபித்துவத்தின் ஆறாம் ஆண்டு துல்ஹஜ் மாதம் ஹம்ஜா (ரழி) அவர்கள் இஸ்லாமைத் தழுவி மூன்று நாட்கள் கழித்து உமர் இஸ்லாமைத் தழுவினார். நபி (ஸல்) அவர்கள் உமர் இஸ்லாமை தழுவ வேண்டுமென இறைவனிடம் வேண்டியிருந்தார்கள். 'அல்லாஹ்வே! உமர் இப்னு கத்தாப் அல்லது அஜஹ்ல் இப்னு ஹிஷாம் ஆகிய இருவரில் உனக்கு விருப்பமானவரைக் கொண்டு இஸ்லாமை வலிமைப்படுத்துவாயாக!" என்று நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் வேண்டினார்கள். அவர்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானவர் உமராக இருந்தார் என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அனஸ் இப்னு உமர் (ரழி) ஆகியோர் அறிவிக்கிறார்கள். உமர் இஸ்லாமைத் தழுவிய நிகழ்ச்சியை விவரிக்கும் அறிவிப்புகளை நாம் ஆய்வு செய்து பார்க்கும்போது உமரின் உள்ளத்தில் இஸ்லாம் படிப்படியாகத்தான் வேரூன்றியது என்பதை தெரிந்து கொள்ளலாம். அந்த அறிவிப்புகளைச் சுருக்கமாக நாம் பார்ப்பதற்கு முன் உமரிடம் இருந்த உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் முதலில் பார்ப்போம். உமர் நல்ல வலிமையும் கம்பீரமான இயல்பும் உடையவர். அவரால் முஸ்லிம்கள் பல வகையான தொந்தரவுகளை எண்ணற்ற இன்னல்களை நீண்ட காலமாக அனுபவித்து வந்தனர். எனினும்அவரது உள்ளத்தில் பல மாறுபட்ட உணர்ச்சிகளின் போராட்டம் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. ஒருபுறம் தங்களது மூதாதையர்கள் கடைபிடித்து வந்த சடங்குகளைப் பின்பற்றி அவற்றுக்காக வீறுகொண்டு எழுந்தார். மற்றொருபுறம் கொள்கையில் முஸ்லிம்களுக்கு இருந்த உறுதியையும் அதற்காக சோதனைகள் அனைத்தையும் அவர்கள் தாங்கிக் கொள்வதையும் பார்த்து ஆச்சரியமடைந்தார். மேலும் ஒரு நல்ல பகுத்தறிவுவாதிக்கு வரும் சந்தேகங்கள் அவருடைய உள்ளத்திலும் அவ்வப்போது தோன்றி மறைந்தன. ஒரு வேளை இஸ்லாமிய போதனை மற்றவைகளைவிட தூய்மையானதாக சரியானதாக இருக்கலாமோ என யோசிப்பார். அதனால்தான் அவருக்கு இஸ்லாமின்மீது கோபம் பொங்கி எழும்போதெல்லாம் உடனடியாக அடங்கியும் விட்டது. உமர் இஸ்லாமைத் தழுவிய நிகழ்ச்சியை விவரிக்கும் அறிவிப்புகளை முறையாக இங்கு நாம் பார்ப்போம். ஓர் இரவில் தனது வீட்டுக்கு வெளியில் தூங்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது. நேராக ஹரமுக்கு வந்து கஅபாவின் திரைக்குள் நுழைந்து கொண்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அங்கு தொழுது கொண்டிருந்தார்கள். தொழுகையில் நபி (ஸல்) அவர்கள் அத்தியாயம் அல்ஹாக்கா ஓத அதன் வசன அமைப்புகளை ரசித்து உமர் ஓதுதலைச் செவிமடுத்தார். இதைத் தொடர்ந்து உமர் கூறுகிறார்: நபி (ஸல்) அவர்கள் ஓதுவதை கேட்டுக் கொண்டிருந்த நான் எனது எண்ணத்தில் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவர் கவிஞராக இருப்பாரோ! என்று என் உள்ளத்தில் கூற இது நிச்சயமாக (நம்மால் அறிவிக்கப்பட்டபடி) மிக்க சங்கை பொருந்திய ஒரு தூதரால் கூறப்பட்டதாகும். இது ஒரு கவிஞனுடைய சொல்லல்ல. எனினும் (இதனை) நீங்கள் வெகு சொற்பமாகவே நம்பிக்கை கொள்கின்றீர்கள். (அல்குர்ஆன் 69:40 41) என்ற வசனங்களை நபி (ஸல்) அவர்கள் ஓதினார்கள் அடுத்து இவர் ஜோசியக்காரராக இருப்பாரோ! என்று என் உள்ளத்தில் நான் கூற (இது) ஒரு ஜோசியக்காரனுடைய சொல்லுமல்ல. (எனினும் இதனைக் கொண்டு) வெகு சொற்பமாகவே நீங்கள் நல்லுபதேசம் அடைகின்றீர்கள். உலகத்தார்களின் இறைவனால் (இது) இறக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 69:42 43) என்ற வசனங்களை நபி (ஸல்) அவர்கள் ஓதினார்கள். அது சமயம் எனது உள்ளத்தில் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இது உமர் இதயத்தில் விழுந்த இஸ்லாமின் முதல் விதையாகும். எனினும் அறியாமைக் கால எண்ணங்களும் மூட பழக்க வழக்கங்களின் பிடிவாதமும் மூதாதையர்களின் மார்க்கத்தை உயர்வாக கருதி வந்ததும் அவரது உள்ளம் ஒத்துக் கொண்டிருந்த மகத்தான உண்மையை மறைத்திருந்தது. தனது உள்ளத்தில் பொதிந்து கிடந்த உணர்வைப் பொருட்படுத்தாமல் இஸ்லாமுக்கு எதிராக செயல்படுவதிலேயே தீவிரம் காட்டி வந்தார். நபி (ஸல்) அவர்களின் மீது அவருக்கிருந்தஅளவுமீறிய கோபத்தினால் வாளை ஏந்தி நபி (ஸல்) அவர்களின் கதையை முடித்துவிட வெளியேறினார். அப்போது நுஅய்ம் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் வழியில் அவரை சந்தித்து 'உமரே நீ எங்கு செல்கிறாய்?" என்று கேட்க 'நான் முஹம்மதை கொல்லச் செல்கிறேன்." என்றார். அதற்கு நுஅய்ம் 'நீ முஹம்மதை கொலை செய்துவிட்டு ஹாஷிம் ஜுஹ்ரஹ் இவ்விரு கிளையார்களிலிருந்து பயமின்றி தப்பித்து வாழ்வது எங்ஙனம்?" என்று அச்சுறுத்தினார். அவரை நோக்கி 'நீ உனது மார்க்கத்தை விட்டுவிட்டு அவரது மார்க்கத்திற்கு சென்று விட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது" என்று உமர் கூறினார். அதற்கு நுஅய்ம் 'உமரே! ஆச்சரியமான ஒன்றை நான் உமக்கு சொல்லட்டுமா?. உனது சகோதரியும் (அவரது கணவர்) உனது மச்சானும் உனது மார்க்கத்தை விட்டுவிட்டு முஹம்மதின் மார்க்கத்துக்குச் சென்று விட்டனர்" என்று கூறியதுதான் தாமதம். அவ்விருவரையும் தண்டிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களை நோக்கி உமர் விரைந்தார். அப்போது அங்கு கப்பாப் (ரழி) அவர்கள் உமரின் சகோதரிக்கும் அவரது கணவருக்கும் தனது ஏட்டிலுள்ள 'தாஹா| எனத் தொடங்கும் அத்தியாயம் தாஹாவின் வசனங்களை கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். உமர் வருவதை அறிந்த கப்பாப் (ரழி) வீட்டினுள் மறைந்து கொண்டார். உமரின் சகோதரியும் அந்த ஏட்டை மறைத்து விட்டார்கள். எனினும் உமர் வீட்டிற்கு அருகே வந்தபோது கப்பாப் (ரழி) கற்றுக் கொடுத்த சப்தத்தை கேட்டு விட்டார். வீட்டினுள் நுழைந்த உமர் 'உங்களிடம் நான் செவிமடுத்த இந்த மெல்லிய சப்தம் என்ன?" என்று கேட்டதற்கு 'நாங்கள் பேசிக் கொண்டிருந்ததை தவிர வேறு எதுவும் இல்லை" என்று அவ்விருவரும் கூறினார்கள். அப்போது உமர் 'நீங்கள் மதம் மாறிவிட்டீர்களா?" என்று கேட்டார். அதற்கு அவரது மச்சான் 'உமரே! சத்தியம். உன்னுடைய மார்க்கத்தை தவிர வேறொன்றில் இருந்தால் உன் கருத்து என்ன?" என்று கேட்கஉமர் கடுஞ்சினம் கொண்டு தனது மச்சானின் மீது பாய்ந்து அவரை பலமாகத் தாக்கி மிதிக்கவும் செய்தார். அவரது சகோதரி தனது கணவரை விட்டும் உமரை விலக்கினார். உமர் கடுமையாக தன் சகோதரியின் கன்னத்தில் அறைந்து அவரது முகத்தை ரத்தக் காயப்படுத்தினார். கோபம் கொண்ட உமரின் சகோதரி உமது மார்க்கமல்லாத வேறொன்றில் உண்மை இருந்தாலுமா? (அதை ஏற்றுக் கொள்ளக்கூடாது.) 'அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லைமுஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன்" என்று உரக்கக் கூறினார். தனது கோபம் பலனற்றுப் போனதைக் கண்டு உமர் நிராசை அடைந்தார். தனது சகோதரிக்கு ஏற்பட்ட ரத்தக் காயத்தைப் பார்த்து அவருக்கு கைசேதமும் வெட்கமும் ஏற்பட்டது. உங்களிடமுள்ள இப்புத்தகத்தை எனக்குக் கொடுங்கள். நான் அதை படிக்க வேண்டும் என்று அவர் கூறினார். அதற்கு அவரது சகோதரி 'நீ அசுத்தமானவர். நீர் எழுந்து குளித்து வாரும்" என்று கூறி அதைத் தர மறுத்துவிட்டார். பிறகு குளித்து வந்தவுடன் திருமறையை கையிலேந்தி 'பிஸ்மில்லார்ரஹ்மானிர்ரஹீம்" (அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்) என்று ஓதியவுடன் 'ஆஹா! என்ன தூய்மையான பெயர்கள்" என்று கூறிதொடர்ந்து 'தாஹா| என்று தொடங்கி பதினான்காவது வசனம் வரை ஓதி முடித்துவிட்டு 'இது எவ்வளவு அழகான சொற்கள்! எவ்வளவு இனிமையான வசனங்கள்! எனக்கு முஹம்மதைக் காட்டுங்கள்!" என்று கேட்டுக் கொண்டார். உமரின் பேச்சைக் கேட்ட கப்பாப் (ரழி) வெளியேறி வந்து 'உமரே! நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள். வியாழன் இரவு 'அல்லாஹ்வே! உமர் அல்லது அஜஹ்ல் மூலமாக இஸ்லாமுக்கு உயர்வைக் கொடு!" என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் செய்த பிரார்த்தனை உங்கள் விஷயத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று நான் உண்மையில் நம்புகிறேன்" என்றுரைத்தார். நபி (ஸல்) அவர்கள் ஸஃபா மலையில் உள்ள இல்லத்தில் இருந்தார்கள். உமர் தனது வாளை அணிந்து கொண்டு நபி (ஸல்) அவர்களின் வீட்டை நோக்கி வந்தார். உமர் கதவைத் தட்டியபோது ஒருவர் கதவின் இடுக்கின் வழியாக உமரை வாள் அணிந்த நிலையில் பார்த்து நபி (ஸல்) அவர்களுக்கு அச்செய்தியைக் கூறினார். அங்கிருந்தவர்கள் எல்லாம் ஒன்று கூடிவிட்டார்கள். மக்கள் 'உமர் வந்திருக்கிறார்" என்று கூறினார்கள். 'ஓ! உமரா! (வந்திருக்கிறார்?) அவருக்கு கதவை திறந்து விடுங்கள்! அவர் நன்மையை நாடி வந்திருந்தால் அந்த நன்மையை நாம் அவருக்குக் கொடுப்போம்! அவர் தீமையை நாடி வந்திருந்தால் அவரது வாளாலேயே அவரை நாம் கொலை செய்து விடுவோம்!" என்று ஹம்ஜா (ரழி) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் வீட்டின் உள்பகுதியில் வஹி (இறைச்செய்தி) வந்த நிலையில் இருந்தார்கள். சிறிது நேரத்துக்குப் பிறகு உமரை சந்தித்த நபி (ஸல்) அவர்கள் உமரின் சட்டையையும் வாளையும் பிடித்து அவரைக் குலுக்கி 'உமரே! நீ வழிகேட்டிலிருந்து விலக மாட்டாயா? வலீதுக்கு ஏற்பட்டதைப் போன்ற கேவலத்தையும் தண்டனையும் அல்லாஹ் உனக்கு இறக்க வேண்டுமா? அல்லாஹ்வே! இதோ உமர் இப்னு கத்தாப் வந்திருக்கிறார். அல்லாஹ்வே! உமரால் இஸ்லாமிற்கு உயர்வைக்கொடு!" என்று கூறினார்கள். உமர் (ரழி) 'அஷ்ஹது அல்லாஇலாஹஇல்லல்லாஹ் வ அன்னக்க ரஸ{லுல்லாஹ்" என்று கூறி இஸ்லாமைத் தழுவினார். (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை அல்லாஹ்வின் தூதர் நீங்கள் என்றும் சாட்சி கூறுகிறேன் என்பதே இதன் பொருளாகும்.) இதனைப் பார்த்த வீட்டில் உள்ளவர்கள் தக்பீர் (அல்லாஹ{ அக்பர் - அல்லாஹ் மிகப் பெயரிவன் என்று) முழங்கினர். அந்த சப்தத்தைப் பள்ளியில் உள்ளவர்களும் கேட்டார்கள். யாராலும் எதிர்கொள்ள முடியாத அளவுக்கு உமர் (ரழி) வலிமை மிக்கவராக இருந்தார். அவர் இஸ்லாமை ஏற்றுக்கொண்டது இணைவைப்பவர்களுக்கிடையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதுடன் இனி தங்களுக்கு இழிவும் பலவீனமும்தான் என்பதை அவர்களுக்கு உணர வைத்தது. உமர் (ரழி) இஸ்லாமைத் தழுவியது முஸ்லிம்களுக்குக் கண்ணியத்தையும் சிறப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. உமர் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: 'நான் இஸ்லாமைத் தழுவியபோது மக்காவாசிகளில் நபி (ஸல்) அவர்களுக்கு மிகக் கடுமையான எதிரி யார்? என்று யோசித்தேன். அ ஜஹ்ல்தான் அந்த எதிரி என்று கூறிக்கொண்டு நான் அவனிடம் வந்து அவனது வீட்டுக் கதவைத் தட்டினேன். என்னைப் பார்த்த அவன் 'வருக! வருக! நீங்கள் வந்ததற்குரிய காரணம் என்ன?" என்று வினவினான். 'நான் அல்லாஹ்வையும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களையும் நம்பிக்கை கொண்டேன். அவர் கொண்டு வந்த மார்க்கத்தை உண்மை என்று நம்புகிறேன்" என்று கூறினேன். அதற்கவன் 'அல்லாஹ் உன்னை கேவலப்படுத்துவானாக! நீ கொண்டு வந்ததையும் கேவப்படுத்துவானாக!" என்று கூறி என் முகத்தில் கதவை அறைந்து சாத்தி விட்டான்." (இப்னு ஹிஷாம்) உமர் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: அக்காலத்தில் ஒருவர் முஸ்லிமாகிவிட்டார் என்று தெரியவந்தால் அனைவரும் அவரைப் பிடித்து அடிப்பார்கள்¢ சண்டை செய்வார்கள். நானும் முஸ்லிமாகி எனது தாய்மாமா 'ஆஸி இப்னு ஹாஷிமிடம்| வந்து அதைக் கூறியவுடன் அவர் என்னை ஒன்றும் செய்யாமல் வீட்டுக்குள் நுழைந்து கொண்டார். அவ்வாறே குறைஷிப் பெரியோர்களில் ஒரு முக்கியமானவரிடம் சென்று கூறினேன். அவரும் என்னை ஒன்றும் செய்யாமல் வீட்டுக்குள் நுழைந்து கொண்டார். அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அறிவிக்கிறார்கள்: உமர் (ரழி) இஸ்லாமைத் தழுவிய செய்தி குறைஷிகள் எவருக்கும் தெரியவில்லை. இதனால் செய்திகளை மக்களிடத்தில் மிக அதிகம் பரப்புபவர் யார்? என்று உமர் (ரழி) விசாரித்தார். அதற்கு ஜமீல் இப்னு முஅம்மர் அல் ஜும என்று பதில் கூறப்பட்டவுடன் அவரிடம் சென்றார்கள். நானும் உடன் இருந்தேன். அப்போது எனக்கு பார்ப்பதையும் கேட்பதையும் நன்கு புரிந்து கொள்ளக்கூடிய வயதுதான். உமர் (ரழி) அவரிடம் சென்று 'ஓ ஜமீல்! நான் முஸ்லிமாகி விட்டேன்" என்று கூறியவுடன் அவர் மறுபேச்சு பேசாமல் நேராகப் பள்ளிக்குச் சென்று உரத்த குரலில் 'ஓ குறைஷிகளே! கத்தாபின் மகன் மதம் மாறிவிட்டான்" என்று கத்தினான். அவனுக்கு பின்னால் உமர் (ரழி) நின்றுகொண்டு 'இவன் பொய் கூறுகிறான். நான் மதம் மாறவில்லை. மாறாக முஸ்லிமாகி விட்டேன்! அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டேன்! அவனது தூதரை உண்மை என்று மெய்ப்பித்தேன்" என்று கூறினார்கள். இதைக் கேட்ட மக்கள் ஒன்று கூடி உமரின் மீது பாயத் தொடங்கினார்கள். அவர்கள் உமரிடம் சண்டையிட உமரும் அவர்களிடம் சண்டையிட்டார். சூரிய வெப்பம் அதிகரித்தபோது களைத்துவிட்ட உமர் (ரழி) கீழே உட்கார்ந்து விட்டார். மக்கள் அவரைச் சுற்றி நின்று கொண்டார்கள். உங்களுக்கு என்ன விருப்பமோ! அதை செய்து கொள்ளுங்கள். அல்லாஹ்வின் சத்தியமாக கூறுகிறேன். நாங்கள் குறைந்தது 300 நபர்களாக பெருகிவிட்டால் ஒன்று மக்கா(வின் ஆதிக்கம்) உங்களுக்கு அல்லது எங்களுக்காகி விடும்" என்று கூறினார்கள். (இப்னு ஹிஷாம்) இதற்குப் பிறகு உமரை கொலை செய்யக் கருதி இணைவைப்பவர்கள் உமரின் வீட்டுக்கு படையெடுத்தனர். உமர் (ரழி) வீட்டில் பயந்த நிலையில் இருந்தபோது அஅம்ர் ஆஸ் இப்னு வாயில் என்பவர் வந்தார். அவர் யமன் நாட்டு போர்வையும் கை ஓரம் பட்டினால் அலங்கரிக்கப்பட்ட சட்டையும் அணிந்திருந்தார். அறியாமை காலத்தில் அவரது கிளையார்களான பனூ ஸஹம் எங்களுடைய நட்புக்குரிய கிளையார்களாக இருந்தார்கள். அவர் உமரிடம் 'உனக்கு என்ன நேர்ந்தது?" என்று வினவினார். உமர் (ரழி) 'நான் முஸ்லிமானதற்காக என்னை உமது கூட்டம் கொலை செய்ய முனைகிறார்கள்" என்று கூறினார். அதற்கு அவர் 'அப்படி ஒருக்காலும் நடக்காது" என்று கூறினார். அவர் இந்தச் சொல்லை கூறியதற்கு பிறகு உமர் நிம்மதியடைந்தார். இதற்கு பிறகு ஆஸ் வெளியேறி வந்து பார்த்தபோது அங்கு மக்களின் பெரும் கூட்டம் ஒன்று இருந்தது. அவர்களைக் கண்ட ஆஸ் 'எங்கே வந்தீர்கள்?" என்று கேட்டதற்கு 'இதோ கத்தாபின் மகன் மதம் மாறிவிட்டார். அவரிடம்தான் வந்துள்ளோம்" என்று கூறினார்கள். அதற்கு ஆஸ் 'அவரை ஒருக்காலும் நீங்கள் நெருங்க முடியாது" என்று கூறவே அனைவரும் திரும்பிச் சென்றுவிட்டனர். (ஸஹீஹ{ல் புகாரி) இதுவரை கூறிய நிகழ்ச்சிகள் இணைவைப்பவர்களைக் கவனித்துக் கூறப்பட்டது. முஸ்லிம்களை கவனித்துப் பார்க்கும்போது உமர் (ரழி) இஸ்லாமைத் தழுவியது வித்தியாசமான ஒன்றாகவே இருந்தது. இதைப்பற்றி இப்னு அப்பாஸ் (ரழி) கூறுகிறார்: உமரிடம் 'உங்களுக்கு 'ஃபாரூக்| என்ற பெயர் வரக் காரணம் என்ன?" என்று கேட்டேன். அதற்கவர் 'எனக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக ஹம்ஜா (ரழி) முஸ்லிமானார். பிறகு நான் முஸ்லிமானேன்" என்று தான் முஸ்லிமான சம்பவத்தைக் கூறினார்கள். அதன் இறுதியில் அவர்கள் கூறியதாவது: நான் முஸ்லிமானபோது 'அல்லாஹ்வின் தூதரே! நாம் இறந்தாலும் உயிர் வாழ்ந்தாலும் உண்மையில்தானே இருக்கிறோம்" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'ஆம்! எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் இறந்தாலும் உயிர் வாழ்ந்தாலும் உண்மையில்தான் இருக்கிறீர்கள்" என்று கூறினார்கள். அதற்கு நான் 'அப்போது ஏன் மறைவாக செயல்பட வேண்டும். உங்களைச் சத்திய மார்க்கத்தைக் கொண்டு அனுப்பிய இறைவனின் மீது ஆணையாக! நாம் வெளிப்படையாக சத்தியத்தைக் கூறியே ஆக வேண்டும்" என்று கூறி முஸ்லிம்களை இரண்டு அணிகளாக ஆக்கி ஓர் அணியில் நானும் மற்றொரு அணியில் ஹம்ஜாவும் இருந்துகொண்டு நபி (ஸல்) அவர்களை இரு அணிகளுக்கு நடுவில் ஆக்கிக் கொண்டோம். திருகையிலிருந்து மாவுத் தூள்கள் பறப்பது போன்று எங்களது அணிகளில் இருந்து புழுதிகள் பறந்தன. நாங்கள் பள்ளிக்குள் நுழைந்தவுடன் என்னையும் ஹம்ஜாவையும் பார்த்த குறைஷிகளுக்கு இதுவரை ஏற்பட்டிராத கைசேதமும் துக்கமும் ஏற்பட்டது. அன்றுதான் நபி (ஸல்) அவர்கள் எனக்கு 'அல் ஃபாரூக்'" எனப் பெயரிட்டார்கள். (தாரீக் உமர்) உமர் (ரழி) முஸ்லிமாகும் வரை நாங்கள் கஅபாவுக்கு அருகில் தொழக்கூட முடியாதவர்களாகவே இருந்தோம்" என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரழி) கூறுகிறார்கள். (முக்தஸருஸ்ஸீரா) 'உமர் (ரழி) இஸ்லாமைத் தழுவியபோதுதான் இஸ்லாம் வெளி உலகுக்குத் தெரியவந்தது. பகிரங்கமாக இஸ்லாமிய அழைப்பு விடப்பட்டது. கஅபாவைச் சுற்றி கூட்டமாக நாங்கள் அமர்ந்தோம். மேலும்ää எங்களுக்கு கஅபாவை தவாஃப் செய்ய முடிந்தது. எங்களிடம் கடுமையாக நடந்து கொள்பவர்களிடம் அவர்கள் செய்யும் கொடுமைகளில் சிலவற்றுக்காவது நாங்கள் பதிலடி கொடுத்தோம்" என்று ஸ{ஹைப் இப்னு ஸினான் (ரழி) கூறுகிறார்கள்.(தாரீக் உமர்) 'உமர் (ரழி) முஸ்லிமானதற்கு பிறகே நாங்கள் பலமிக்கவர்களாக ஆனோம்" என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரழி) கூறுகிறார்கள். (ஸஹீஹல் புகாரி)

இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு
(அர்ரஹீக்குல் மக்தூம்)சில வறிகள்,...

ஆசிரியர்: இஸ்லாமியப் பேரறிஞர் ஸஃபிய்யுர் ரஹ்மான் தமிழில்: மௌலவி முஃப்தி உமர் ஷரீஃப் காசிமி

0 comments:

Visit the Site
MARVEL and SPIDER-MAN: TM & 2007 Marvel Characters, Inc. Motion Picture © 2007 Columbia Pictures Industries, Inc. All Rights Reserved. 2007 Sony Pictures Digital Inc. All rights reserved. blogger template by blog forum.